என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Saturday, January 07, 2012

திசைகளை நோக்கி


நேற்றுக் காலையில் எழுதி முடித்தவுடன் அறையை ஒதுங்க வைத்து விட்டுக் குளிக்கப் புறப்பட்டேன். துணிகளை எல்லாம் உள் அறைக்குள் கொண்டு போய் விட்டு, புத்தகங்கள் அடுக்கிக் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டிகளை பொருட்களை வைக்கும் மேல் பரணில் போட்டேன். இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை சீர்படுத்தி வைப்பதில் ஒரு இடத்தைப் பெரியதாகவோ சின்னதாகவோ ஆக்கி விட முடியும். எல்லாவற்றையும் குவித்துக் குழப்பமாகப் போட்டால் பெரிய இடம் கூட மூச்சு முட்டுமளவுக்கு நெருக்கடியாகத் தோன்றும். அதனதன் இடத்தில் அதனதனை வைத்தால் சின்ன அறையைக் கூட வசதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் பிறகு உலாவப் போனேன். கீழே வீட்டுக் கார அம்மாவும், மேல் வீட்டில் இருக்கும் அம்மாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாளிதழ் கடை வரை போய்த் திரும்ப வேண்டும். கடையில் என்னைப் பார்த்ததுமே நாளிதழை எடுத்துக் கொடுத்து விட்டார். 5 ரூபாய் நாணயத்துக்கு 2 ரூபாய் போக மீதி 3 ரூபாயும். திரும்பி வரும் போதும் கீழேதான் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வணக்கம் வைத்தேன்.

தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்து விடாமல் வெளியில் போய் உள்ளே வந்து நடமாடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பழக்கமாகி விட்டதால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கீழே குளியலறையில் போய்க் குளித்து விட்டு வந்தேன். உடை மாற்றிக் கொண்டு உட்கார்ந்து இணையத்தில் பின்னூட்டத்தைப் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு 8 மணிக்குப் புறப்பட்டேன்.

சாப்பிடுவதற்கு இட்லி அம்மா கடைக்கே போய் விட்டேன். வழக்கமான உணவு, வழக்கமான சக வாடிக்கையாளர்கள். அண்ணன், தம்பி, தங்கை மூன்று பேரும் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். தினமும் வருவார்களா, அல்லது வெள்ளிக்கிழமை மட்டுமா என்று தெரியவில்லை. தங்கைக்கு இரண்டு இட்லிகள், தக்காளி சட்டினி மட்டும். ஒன்றை சாப்பிட்ட பிறகு இன்னொன்றுக்கு தேங்காய் சட்டினி என்று வளைந்து நெளிந்து கொண்டே கேட்டு வாங்கிக் கொண்டாள். எந்த குளறுபடியும் இல்லாமல் சமத்தாக சாப்பிட்டு எழுந்து விடுகிறாள். காசு கொடுத்த மூத்த அண்ணன் மீதிக் காசு 2 ரூபாயை தம்பியிடம் கொடுத்து விடச் சொன்னான். கொஞ்ச நேரத்தில் சில்லறை வந்ததும் இவள் கேட்டு வாங்கிக் கொண்டாள். 'நீ போடா' என்று கடைக்கார அம்மா துரத்த, தங்கச்சிக்கு ஒரு சின்ன அடி கொடுத்து விட்டு ஓடினான். 'இது வீட்டில கொண்டு கொடுக்கும், அவன்னா பாக்கெட்டில போட்டுக்குவான்' என்று விளக்கம்.

எதிர்ப்புறம் சாலையைக் கடந்து வந்த பகிர்வூர்தியில் ஏறினேன். நல்ல மெரூன் நிறத்தில் இருக்கைகள் போட்டு, திரைச்சீலைகள் தொங்க விட்டு, பாட்டு போட்டு வைத்திருந்த டீலக்ஸ் டாடா மேஜிக் வண்டி. இது போன்று கவனமாக சீரமைக்கப்பட்ட ஒரு வண்டி எவ்வளவு புத்துணர்வைத் தந்து விடுகிறது. சாலை முனை தாண்டுவதற்குள் பின் இருக்கைக்  நிரம்பி விட்டன. இரண்டு பள்ளிச் சிறுமிகள் ஏறினார்கள். கொஞ்ச தூரத்தில் இன்னும் 3 சிறுமிகள். இரண்டு பேர் பின்பக்க இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள ஒருத்தி முன் பக்கம் நெருக்கத்தில் சேர்ந்து கொண்டாள். ஆட்கள் ஏறி இறங்கி நான் அசோக்  பில்லர் அருகில் இறங்கினேன். 7 ரூபாய்தான் வாங்கினார். பேருந்தில் இதை விட அதிகம் ஆகும்.

சாலையைக் கடந்து பல்லாவரம் போகும் பேருந்துகள் நிற்கும் இடம். நிறையக் கூட்டம், பேருந்துகள் எதுவும் வரும் அறிகுறி தெரியவில்லை. நேரம் 8.40 ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து பல்லாவரத்தில் இறங்கி, பாண்ட்ஸ் வரை இன்னொரு பேருந்து, ஆட்டோ அல்லது பல்லாவரத்திலிருந்து ஆட்டோ. நெருக்கடியாக இருக்கிறது என்று ஏசி வோல்வோவில் ஏறினால் 50 ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம். ஆட்டோவுக்கு 70 ரூபாய் - 100 ரூபாய் ஆகி விடும். இங்கிருந்தே ஆட்டோவில் போனால் என்ன, உட்கார்ந்து கொண்டு போய் விடலாம், நேரத்துக்கும் போய் விடலாம். ஆட்டோக் காரர் ஒருவரை நெருங்கிக் கேட்டால் 200 ரூபாய் சொன்னார்.

சில நொடிகள் தயங்கி, முகத்தில் பேரம் பேசும் சுளிப்பைக் காட்ட, அவரே கட்டணத்தை நியாயப்படுத்தினார். ஏறிக் கொண்டேன். நூறடி சாலையில் கத்திப்பாரா வரையில் நெருக்கடிதான்.

ஆட்டோக் காரர் வாயில் ஏதோ புகையிலை அல்லது பான் போட்டுக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை துப்பிக் கொண்டே இருந்தார். வழியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டேட் வங்கியாக இருந்தால் நல்லது. கடைசியில் நங்கநல்லூர் பெட்ரோல் நிலையத்தினுள் இருந்த எச்டிஎப்சிக்கு அருகில் நிறுத்தினார். நான் பணம் எடுக்கப் போய் விட்டு வந்தால் ஆட்டோவைக் காணவில்லை. அவர் உள்ளே போய் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். சரியாக 9.30க்கு பாண்ட்ஸ் அருகில் வந்து விட்டோம். ரொம்ப தூரமா என்று கேட்டுக் கொண்டே திருநீர்மலை சாலையில் விட்டார். சந்துக்குள் போகாமல் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டேன். 'கொஞ்சம் போட்டுக் கொடுங்க சார், குறைவாத்தான் கேட்டிருக்கேன்' என்றார். 'நான் 150 ரூபாய்தான் நினைத்தேன், 200க்கு பேரம் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்டே 20 ரூபாய் அதிகம் கொடுத்தேன்.

அலுவலகத்தில் வந்து விட்டிருந்தார்கள். முதல் வேலையாக புதிதாக இயங்கு தளம் மாற்றிய கணினியில் மென்பொருளை இணைத்துக் காட்டினேன். தொடர்ந்து விலை மாற்றும் போது ஹைட், சைட் மாறி விடுவதைச் சரி செய்தேன். அதில் ஏற்பட்ட சிறு வழுவையும் சரி செய்து கொடுத்தேன். அடுத்ததாக பேக்கிங் லிஸ்டில் 10ன் மடங்குகளான எண்ணிக்கையில் வரும் போது மொத்தக் கூட்டல் தனிப்பக்கத்துக்குப் போய் விடுவதைச் சரி செய்தேன். போன முறை முயன்று வெகு நேரம் கழித்து விட்டு விட்டேன். கடைசி வரிக்கு வரும் போது புதுப் பக்கம் போக வேண்டுமா என்று செயலியை அழைப்பதற்கு முன்பு மொத்த இனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு வரி எழுதியதும் சரியாகி விட்டது.

அடுத்ததாக விற்பனை அறிக்கையில் வரி+செலவுகளையும் சேர்த்து மொத்த மதிப்பையும் காட்ட வேண்டும் என்ற தேவை. முதலில் மடிக்கணினியில் செய்து சரி பார்த்து விட்டு அதன் பிறகு சர்வரில் இயக்கினேன். அவர்கள் கேட்டது போல செய்து கொடுத்து விட்டேன்.

ஆவணப்படத்தை தகவிறக்கித் தரும்படி கேட்டதைச் செய்து விட்டார். இப்போது முதல் ஆண்டு இலவச பராமரிப்புக் கட்டம். இதையாவது கட்டணமாக வாங்கிக் கொள்ளலாம். 220 ரூபாய் ஆட்டோக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். புறப்படும் முன்பு அதையும் கொடுத்து விட்டார். அவர்களுக்கு அன்லிமிடெட் இணைய இணைப்பு ஆனதால் கூடுதல் செலவு கிடையாதுதான். போகும் போது அவர்கள் ஊழியர் ஒருவரை பல்லாவரத்தில் கொண்டு விடச் சொல்லி விட்டார் பங்குதாரர்.

கடந்த 2 மாதங்களாக வியாபாரம் மிகவும் குறைவாக இருக்கிறதாம். அதனால் அவர் தினமும் வருவதில்லையாம். பல்லாவரம் பகுதி முழுமையுமே அப்படித்தான் இருக்கிறது என்றார்கள். பல்லாவரத்திலிருந்து போவதற்கு ஒரு பேருந்து தடம் இருக்கிறதாம். ஆனால் எந்த நேரம் என்று தெரியவில்லை.

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி கிண்டி வண்டியில் ஏறிக் கொண்டேன். விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த திநகர் போகும் பேருந்து. கிண்டியில் இறங்கும் போது 12 மணிதான்.ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முதல் இரண்டு கடைகளில் பார்த்தால், பிரியாணி, புரோட்டாதான். அடுத்து ஒரு சின்னக் கடையில் எலுமிச்சை சாதம். 15 ரூபாய். 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்து விட்டார். நான் உட்கார்ந்த மேசையில் மூன்று பெண்கள் உட்கார்ந்தார்கள்.ஒரு பெண் கைக்குழந்தையுடன். ஒரு லெமன், ஒரு தக்காளி, ஒரு சாம்பார் என்று ஆளுக்கு ஒரு வகை. வாங்கி வந்த பெண் ஒரு வடையும் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து பாதி வடையை எடுத்துக் கொண்டார் கைக்குழந்தை பெண்.

குழந்தை தவளும் வயதுதான். மேசையில் உட்கார்த்தி வைத்ததும் இரண்டு பேரிடமும் மாறி மாறிப் போய் வாயில் சோறு வாங்கிக் கொண்டான். சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்த பெண்ணுக்கு தொலைபேசி வந்தது, அவரிடமிருந்து வாங்கி, 'நீங்க யாரு, தெரியலையே, நான் இன்னார்' என்று எதிர்முனைக் காரரை கலாய்த்தார் குழந்தையின் அம்மா. தொடர்ந்து நீங்க கேட்பவரின் 'உங்க அக்காவின் பிரெண்டு நான், உங்ககிட்ட பேச மாட்டாங்களாம்' என்று இன்னும் ஒரு அடி அடித்து விட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உரியவரிடம் பேசக் கொடுத்தார். 'நான் அப்படி எல்லாம் சொல்லவேயில்லையே, கடைக்குப் போயிருந்தேன்' என்று அவர் புராணத்தைத் தொடர நான் எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போனேன்.

தபால் நிலையத்துக்குப் போய் கனிம வள நிறுவனத்துக்கான மனுவை அனுப்ப வேண்டும். 2 நாட்களாக பையில் இருக்கிறது. இதைத் தவற விட்டால் எங்கு தபால் நிலையம் தேடுவது! இரண்டு கவுண்டர்கள், இரண்டின் முன்பும் தலா 3-4 பேர். அப்பால் இருக்கும் 3 கவுண்டர்களில் மற்ற திட்டங்களுக்கான சேவை போலிருக்கிறது. ஆற அமர, தொலைபேசியில் பேசிய படி, தங்களுக்குள் பேசியபடி கணினியில் தகவல் உள்ளிட்டு தபால்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள், இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளும். எனது முறை வந்து கவரைக் கொடுத்ததும், உள்ளிருந்து இன்னொரு பெண் வந்து இரண்டு பேருக்கும் 121 ரூபாய் கொடுத்தார். ஏதோ ஊக்கத் தொகையாம். கொடுத்ததற்கு ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அவர் இவர்களுக்கு பல ஆண்டுகள் ஜூனியர், நின்று இவர்களின் விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லி விட்டு நகர்ந்தார். மிகவும் அமைதியான பதட்டமில்லாத முகம், அக்கவுண்ட்சில் இருப்பவர்களின் நிதானம் தெரிந்தது.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகி விட்டது. வெளியில் வந்தால் குளிர்சாதன பேருந்து போனது. அதைத் துரத்திப் பிடிக்காமல் காத்திருந்தால்  பேருந்து வர அதில் உட்காரவும் இருக்கை கிடைத்தது. 12.45க்குப் போய் இறக்கி விட்டார்கள். அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயும், இனிப்பான ஒரு டீக்கடை பண்டத்தையும் (பெயர் தெரியவில்லை) சாப்பிட்டுக் கொண்டேன். 10 ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டார். டீ அநியாயத்துக்கு இனிப்பாக இருந்தது.

இப்போதுதான்  வந்து கொண்டிருப்பதாகவும்,  அருகில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்து விடுவதாகவும் அரை மணி நேரம் தாமதமாகி விடும் என்றும் சொன்னார்.

காத்திருந்து அவரும் வந்த பிறகு போகலாம் என்று முடிவு செய்தோம். அவர் சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்ச தூரத்திலிருந்து கடைக்குப் போனோம். அவர் சாப்பாடு, எனக்கு பரோட்டா. அவர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவு வருமாம். எங்கோ மவுண்ட்ரோடிலிருக்கும் செந்தூர் விடுதியிலிருந்து. இன்று டிராபிக் சிக்கலால் தாமதமாக வருகிறதாம். ஏன் அவ்வளவு தூரத்திலிருந்து சாப்பாடு வருகிறது என்று புரியவில்லை.

சாப்பிட்டு முடித்துத் திரும்பி வந்து  தொலைபேசினால், வந்து விட்டேன், ஆட்டோ பிடித்து விட்டேன், வந்து விடுகிறேன் என்றார். ஆனாலும் இன்னும் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அவருடன் ஆட்டோ கண்ணில் பட்டது. சாலை ஓரமாக நின்றிருந்தோம்.

நேரம் 2.45 ஆகி விட்டிருந்தது. புறப்பட்டு விட்டோம்.  நெடுஞ்சாலைக்கு வந்து பேருந்து நிழற்குடை அருகில் நின்றால் எந்த பேருந்தும் நிற்கவில்லை. காலியாக வந்த ஆட்டோவை விட்டு விடக் கேட்டால் 30 ரூபாய் சொன்னார். மகிழ்ச்சியாக ஏறிக் கொண்டோம்.  அருகில் இறங்கி பேருந்து பிடித்து விட நான் குட்டிச் சுவரில் உட்கார்ந்து மின்னஞ்சல் பார்த்தேன். அதை முடித்து விட்டு இடது புறமாகவே நடந்து ஜூஸ் கடைக்குள் போனேன். 1 கேரட் ஜூஸ் என்று கேட்டேன், ஐஸ் போடாமல் என்று சொன்னது அந்த வெளி மாநில சிறுவனுக்குப் புரியவில்லை. அதை அப்படியே ஒலி மாறாமல் போய்ச் சொன்னான். இப்படி கலவையாக சாப்பிட்டதுதான் இரவில் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

வெளியில் வந்து நடந்து சாலையைக் கடந்து போனேன். வாசலில் பதிவுக்குக் கூடக் கேட்கவில்லை. நேராக கட்டிடத்துக்கு வந்து முதல் மாடிக்குப் போனேன். வழியில் பார்த்து வணக்கம் சொன்னேன். அவரும் 4 மணிக்கு வந்து விடுவார். 3.30தான் ஆகியிருந்தது.

மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே போய் கணினியை இயக்கிக் கொண்டேன். நாற்காலிகளை ஒழுங்காகப் போட்டு விட்டு ஒவ்வொருவராக புறப்பட்டுப் போய் விட்டார்கள். இடையில் ஏசி போட்டு விட ஒருவர், தூய்மை செய்ய ஒருவர் என்று வந்து போனார்கள்.

தொடர்ந்து விவாதம் பல திசைகளில் போனது. ஆராய்ச்சிக்கு இண்டஸ்ட்ரீ பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார். அரசு  நிதி உதவி செய்ய மறுக்கிறது. ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து பணம் சம்பாதிக்கச் சொல்கிறது என்று ஆரம்பித்து விவாதம் வளர்ந்தது. இது மிக மிக மோசமான முடிவு, பெரு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்று உறுதியாக பேசினேன்.

வெளியில் வந்தும் பேசிக் கொண்டிருந்தோம்.  அடிப்படை ஆராய்ச்சிக்கு பணம் கிடையாது, தொழில் துறையில் இருப்பவர்கள் 6  மாதக் கண்ணோட்டத்தில்தான் தேவைகளைச் சொல்ல முடிகிறது நிறைய பின்னணி தகவல்கள் தெரிந்தன.

லிபர்டி அருகில் இறங்கி பேருந்து 25G பிடித்தேன்.  பவர் ஹவுஸ் அருகில் உட்காரவும் இடம் கிடைத்து. போக்குவரத்து நெரிசலில் நீந்தி வந்து சேர்ந்தது. கேசவர்த்தினி நிறுத்தம் வரை போகாமல் போக வேண்டிய சாலை அருகில் பேருந்து மெதுவானதும் இறங்கினேன். பின்னாலேயே இன்னொரு பெண் என் மீது விழுந்து இறங்கினார். அவரை முந்தி நடந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்து கை கால் கழுவி விட்டு சிறிது நேரம் கணினி இயக்கி விட்டு கடைக்குப் போய் சாப்பாடு. 1 தோசை, 2 கல் தோசை. இரண்டு பெண்கள் பார்சல் வாங்க நின்றிருந்தார்கள். கூடவே இரண்டு குழந்தைகள். சுமார் 4 வயது ஒரு பெண், திருத்தமாக முகம், இரட்டைக் குடுமி தலை வாரல், குட்டை கவுன் என்று அப்படியே அழகு சொட்டியது. அவள் தம்பி கொஞ்சம் தூங்கி வழிந்த முகத்தோடு அமைதியாக இருந்தான். சிறுமி அடம் பிடித்து 'பார்சல் வேண்டாம், இங்கேயே சாப்பிடணும்' என்று தொடர்ந்து வற்புறுத்த நான் உட்கார்ந்திருந்த மேசையிலேயே எதிரில் உட்கார வைத்தார் கூட்டி வந்த பெண். ஒரு பரோட்டா, தம்பியும் சாப்பிடுகிறாயா என்று அவருக்கு எனக்கு இடது பக்கம் நாற்காலி போட்டு 1 இட்லி. இட்லி பார்த்ததும் அவளுக்கும் இட்லி வேண்டும். 1 இட்லி. இட்லி சாப்பிடும் போதே சப்பாத்தி நினைவு வந்து விட்டது குட்டி பையனுக்கு.  இரண்டு பேரும் சமர்த்தாக சாப்பிட்டு எழுந்தார்கள். குழந்தைகளின் உலகம் அற்புதமானதுதான்.

0 கருத்துரைகள்: