என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Saturday, December 31, 2011

புயல் நாள்


2011ம் ஆண்டின் கடைசி நாள். டிசம்பர் 31, 2011 காலை 5.30.

ஒரு வாரமாக நாட்குறிப்பு எழுதவில்லை. கடைசியாக எழுதியது போன வாரம் ஞாயிற்றுக் கிழமை என்று தேதி காண்பிக்கிறது. இடையில் புதன் கிழமையும் எழுதத்தான் செய்தேன். எழுதி விடும் நாட்கள் மிகவும் செயலாற்றம் மிக்கவையாக மாறி விடுகின்றன.

நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி தாண்டியிருந்தது. எழுந்த பிறகு திரைப்படம் பார்க்கும் வேலை. little red flowers என்ற சீன மொழித் திரைப்படம். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. தானே புயல் கரையைக் கடப்பதன் மழை. சொன்னபடி சரியாக காலை 7 மணிக்கு கரையை கடந்திருக்கிறது.

திரைப்படம் சீனாவின் சிறு குழந்தைகளை வளர்க்கும் ஆரம்பப் பள்ளி பற்றியது. முழுக்க முழுக்க சிறு குழந்தைகளும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆசிரியர்கள், ஆயாக்கள் மட்டும்தான் வருகிறார்கள். பார்வையிடுவதற்கு ஒரு உயர் அதிகாரி இடையில் வருகிறார். அருகில் இருக்கும் மருத்துவமனையில் நோயாளிகள் இரண்டு இடங்களில் உலவுகிறார்கள்.

இவற்றைத் தவிர முழுக்க முழுக்க அந்தக் குழந்தைகளின் உலகம்தான். அவர்களின் குழப்பங்கள், தினசரி நடவடிக்கைகள், முரண்டுகள், சச்சரவுகள், கனவுகள் என்று கவிதையாக எடுக்கப்பட்ட படம்.

படத்தைப் பார்க்கும் யாருக்கும் இது போன்ற அமைப்புகள் மீதான பெரும் விமர்சனம் ஏற்படும். குழந்தையை இவ்வளவு சிறு வயதில்  பிரித்து வளர்ப்பதன் கொடுமையை சொல்லாமல் சொல்லும் படம்.

திரைப்படத்தின் கடைசி 15 நிமிடங்கள் இருக்கும் போது நிறுத்தி வைத்து விட்டுப் புறப்பட்டேன். காலை உணவுக்கு நேரமாகி விட்டது. மழை நன்கு பெய்து கொண்டிருந்தது. குடையைப் பிடித்துக் கொண்டு வெகு தூரம் போக வேண்டாம் என்று வைன் கடையின் அருகில் இருக்கும் தேநீர் கடையில் நாளிதழ் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். அங்கு நாளிதழ்கள் வந்திருக்கவில்லை. தண்ணீர் இரண்டு புறமும் தேங்கி நடப்பதை சிரமமாக்கியிருந்த சாலையில் அரசமர சந்திப்பு வரை போய் வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடைக்குப் போய் விட்டேன்.

அரவிந்த் லேபாரட்டரீஸ் - ஐடெக்ஸ் செய்யும் தொழிற்சாலைக்கு பெண்கள் வரிசையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். குடை பிடித்துக் கொண்டு வருகிறவர்கள், தலையில் துணி மூடிக் கொண்டு வருகிறவர்கள், துப்பட்டாவையை மூடிக் கொண்டு வருகிறவர்கள், சைக்கிளில் வருகிறவர்கள், இரு சக்கர வண்டியில் வந்து இறங்குகிறவர்கள் என்று யாரும் விடுமுறை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. புயல் நாள் என்று விடுமுறையும் அறிவித்திருக்கவில்லை. தொப்ப நனைந்து கொண்டு சிலர் வந்து சேர்ந்தார்கள். எப்படி ஈரமான உடையுடன் உள்ளே வேலை செய்வார்கள் என்று தோன்றியது.

நாளிதழ் வாங்கும் கடையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பெண் இருந்தார். காலை நேர கலக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டு நாளிதழைக் கொடுத்தார். 50 காசு நாளைக்குத் தருகிறேன் என்று கடனும் சொல்லி விட்டார். மழை எல்லோரையும் மாற்றி விடுகிறது. மனதுக்குள்ளிருந்து ஒரு புதிய மனிதரை வெளியில் கொண்டு வந்து விடுகிறது. அதுவும் நேற்று பெய்தது போல பெரும் காற்று இல்லாமல், பெரு மழையாக இல்லாமல் தொடர்ந்து பெய்யும் சிறுமழை தண்ணீருடன் நமக்குள்ள உறவை வெளிக் கொண்டு வந்து விடுகிறது என்று தோன்றுகிறது.

போகும் போது புரிந்து கொண்டு வழிப்பாதைகளில் திரும்பி வந்தேன். வீட்டுக்குப் போகாமல் நேராக இட்லிக் கடைக்கு. அடாது மழை பெய்தாலும் விடாது இட்லி விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான 5 இட்லி, வடை, பூரி.  ஒரு வயதானவர் உட்கார்ந்து தோசை கட்டிப் போக வந்திருந்தார். சாப்பிட்டு விட்டு காசு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். திரைப்படத்தின் மீதியைப் பார்த்து முடித்தேன். கடைசியில் ஏதும் நாடகத்தனமாக காட்சியைச் சேர்த்து முழுப்படத்தின் ஓட்டத்தை மாற்றியிருக்கவில்லை.

கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். 11 மணி வாக்கில் எழுந்து வெளியில் புறப்பட்டேன். வோடபோன் பணம் கட்ட வேண்டும், வங்கியில் சேவை வரி கட்டிய கவுண்டர் பாயிலை வாங்கிக் கொள்ள வேண்டும். நடந்து எதிர்ச் சாலைக்கு வரும் போது ஒரு ஆட்டோ வந்தது. முதலில் ஆற்காடு சாலையில் விடும்படிதான் கேட்டேன். ஆனால் நினைத்துப் பார்த்ததில், பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து, பேருந்து பிடித்து போரூர் அல்லது காரம்பாக்கத்தில் இறங்கி, சுமார் 1 கிமீ நடந்து கடைக்குப் போவதற்கு இதிலேயே போய் விடலாம். 70 ரூபாய் கேட்டார். நியாயமாகப் பட்டது.

வோடபோன் கடைக்கு அருகில் இறங்கினால் பூட்டப்பட்டிருந்தது. இரண்டு பெரிய ஷட்டர்கள் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. வாசலில் நான்கைந்து பேர் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசியிலிருந்து வெளியில் அழைக்கவே முடியவில்லை. இன்னொருவர் வாடிக்கையாளர் சேவைக்கு தொலைபேசி விபரம் அறிந்தார். புயல் காரணமாக எல்லா கடைகளுக்கும் விடுமுறை அளித்திருக்கிறார்களாம். குறைந்த படசம் அழைக்கும் வசதியை திரும்ப கொடுங்கள் என்று கேட்க நான் வாடிக்கையாளர் சேவையை அழைக்கவே முடியவில்லை.

பத்திரிகைக் கடையில் ஆனந்த விகடன் வாங்கலாம் என்று நடந்து போனால் அந்தக் கடையையே காணவில்லை. வழியில் சிம் கார்டிலிருந்து போனுக்கு தொடர்புகளை நகல் எடுக்கும்படி இயக்கி விட்டிருந்தேன். சில நிமிடங்களில் நகல் ஆகி விட்டது. திரும்பவும் பேருந்து நிறுத்தம் அருகில் வந்து குடை பிடித்துக் கொண்டு நின்றேன். ஒரு குடும்பத்தினர் காத்திருந்தார்கள். ஒரு சிறு பெண் மட்டும் குடை பிடித்தபடி சாலை ஓரத்தில் நின்றிருந்தாள். இன்னொரு பையன் இன்னொரு குடையில். இந்தப் பெண் சிறிது நேரத்துக்குப் பிறகு ஒதுங்கி நின்றிருந்த அம்மாவிடம் திரும்பி போய் விட்டாள். பேருந்து எதுவும் வரவில்லை. டாடா மேஜிக் வந்து அதில் முன் இருக்கையில் ஏறிக் கொண்டேன்.

பின் இருக்கைகளில் உட்கார்ந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கி விட எல்&டி தாண்டி வங்கிக்கு முன்பு வரும் போது நானும் முந்தைய நிறுத்தத்தில் ஏறிய இன்னொருவரும் இருந்தோம். இரண்டு பேரும் இறங்கிக் கொண்டோம். 2 பேருக்கு 10 ரூபாய் கொடுத்தவர்கள், 1 ஆளுக்கு 7 ரூபாய் கொடுத்தவர்கள் எல்லாம் இருக்க என்னிடம் 10 ரூபாய் வாங்கி விட்டார். மேக்சி என்ற வண்டியில் வேகமாகப் போன ஒருவரை நிறுத்தத்தில் எவ்வளவு டிக்கெட் போடுகிறாய் என்று கேட்டு 15 ரூபாய் என்று தெரிந்து கொண்டார் இவர். சொல்லவே இல்லை, நானும் 15 ரூபாய் ஆக்கியிருப்பேன். இப்போ 10 ரூபாய்தான் வாங்குகிறேன் என்று குறைப்பட்டுக் கொண்டார்.

வங்கிக்குள் போவதற்கு முன்பு குடையை வெளியில் வைக்கப் பார்த்தால் உள்ளேயே குடை வைக்கும் இடம் இருந்தது. வைத்து விட்டு கடைசியில் அலுவலக அறைக்குப் போய் கேட்டால், முன்பக்கம் முதல் கவுண்டரில் என்று திருப்பி அனுப்பினார். அந்த மேசையில் ஒரு உதவியாளர் ஏதோ ஆவணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முதல் கவுண்டர் என்றார். அங்கே போகப் பார்த்தால், அதற்கு முந்தைய டிராயர்களைப் பார்க்கச் சொன்னார். 'எது என்று தெரியாதா' என்று ஒரு அதட்டல் வேறு. நீங்கதாங்க சொல்லணும், நான் தெரியாம எதையும் நோண்டக் கூடாது என்று உறைக்கச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

வலது புறமாகவே நடந்து பாலத்தைக் கடந்து சாலை நிறுத்தத்துக்கு வந்தேன். விளக்குகள் எரியவில்லை. மணப்பாக்கத்திலிருந்து வரும் சாலையின் முனையில் ஒரு போக்குவரத்துக் காவலர் மழை அங்கி அணிந்து நின்றிருந்தார். இருப்பினும் நன்கு நனைந்திருப்பார். கோழிக் குஞ்சு போலத் தெரிந்தார். முகத்தில் கடுமை குறைந்திருக்கவில்லை. பரிதாபமாக இருந்தது. இந்த மழையிலும் கடமை உணர்வு தவறாமல் இருக்கிறாரே என்று தோன்றியது.

சாலையைக் கடக்கக் காத்திருந்து ராமாபுரம் போகும் இறக்கத்தில் இறங்கினேன். பேருந்து அல்லது ஆட்டோ எதுவும் ஏற்றிப் போக இல்லை. நின்றிருந்த ஒரே ஆட்டோவும் U அடித்து வேறு எங்கோ போய் விட்டார். சிறிது தூரத்தில் இருந்த இணைய மையத்துக்குப் போனேன். வெளியில் குடையை வைத்து விட்டு உள்ளே போனேன்.

புயல் கரையைக் கடந்தது பற்றிய செய்திகள் என்டிடிவியில் முதல் செய்தியாக இருந்தது ஓரளவு திருப்தியாக இருந்தது. பார்ப்பதற்கு முன்பு இது மட்டும் முக்கிய செய்தியாக இல்லா விட்டால்  அர்த்தமே இல்லை என்று நினைத்திருந்தேன்.  பிஎஸ்என்எல் பதிவில் கிருபாகரனின் எண்ணைச் சேர்த்து பதிவில் என் எண்ணையும் சேர்த்து விட்டேன்.

1 மணி நேரத்துக்குப் பிறகு புறப்படாமல் 55 நிமிடங்களில் எழுந்து கொண்டேன். 20 ரூபாய் என்று நினைத்திருந்தேன். 25 ரூபாயாம். 100 ரூபாய் தாளை மாற்றிக் கொண்டேன். ராமாபுரம் போகும் சாலை புதிதாக அகலமாக போடப்பட்டிருந்ததால், மழைத் தண்ணீர் தேங்குவது இல்லாமல் நடக்க வசதியாக இருந்தது.

வெங்கடேஸ்வரா இனிப்புக் கடையில் முறுக்குப் பொதியும், குட்டே பிஸ்கட் பொதியும் வாங்கிக் கொண்டேன். அதை துணிப்பைக்குள் போட்டுக் கொண்டு அரச மரம் நோக்கி நடந்தேன். வழியில் எங்கும் ஆனந்த விகடன் வாங்கவில்லை. மீண்டும் வழக்கமான கடைக்கு வந்து விகடன் கேட்டால் அதே பெண் இருந்தார். நீங்க விகடன் வாங்குவீங்களா, தெரிஞ்சிருந்தா காலையிலேயே சொல்லியிருப்பேனே என்று சொல்லிக் கொண்டு கொடுத்தார். ரிப்போர்ட்டர் வாங்குவீங்களா என்று விசாரிப்பு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு என்று சொன்னேன். 22 ரூபாய். கொஞ்சம் தடியாக இருந்தது. அதிக பக்கங்கள் என்று பம்மாத்து வேலை செய்கிறார்கள். விகடனைப் போன்று வியாபார நியாயம் இல்லாத பத்திரிகையை எங்கும் பார்க்க முடியாது.

அதைக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு அடுத்த பகுதியை கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து விகடன் படித்தேன். மாலை சாப்பிட பக்கத்து பேக்கரியில் முறுக்கு மற்றும் தேங்காய் பன் வாங்கினேன். கிரீம் இல்லாத தேங்காய் பன் இல்லையாம்.

விகடன், தொடர்ந்து இந்திய வரலாற்றில் கீதை புத்தகம். வேதங்கள், உபநிஷதங்கள், ஆறு மரபுகள், பௌத்தப் புரட்சி, பார்ப்பன மறுமலர்ச்சி இவற்றுக்கு மத்தியில் கீதையின் பங்கு என்ற என்று முன்னுரையே நூலின் மூன்றில் ஒரு பகுதி ஆகி விட்டது. பார்ப்பனீய கருத்துக்களை பௌத்த மெய்ஞ்ஞானத்தில் பழகிய அறிவுஜீவியினரும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்துக்களை, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வடிவில், கவர்ச்சிகரமான பொதியில் கொடுத்து 15 நூற்றாண்டுகளாக கீதை ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று சொல்வதுதான் நூலின் நோக்கம்.

மாலையில் 7 மணிக்குப் பிறகு வெளியில் போய் கடையில் 6 இட்லி பொதி வாங்கினேன். தோசை மாவு, இட்லி பொடி, ஷாம்பூ, தீப்பெட்டி, சன்ரைஸ் காபி, இவ்வளவும் வாங்கிய ஒரு முதியவருக்கு பில் 30 ரூபாய்தான். அதையும் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டார். நானும் இட்லி பொடி பொதி வாங்கிக் கொண்டேன். ஒன்று 1 ரூபாய்தான், இரண்டு பொதிகள் 2 ரூபாய்க்கு. 6 இட்லிக்கு 18 ரூபாய், மொத்தம் 20 ரூபாய்.

மழை நாளில் வீட்டில் அடைந்திருக்கும் போதே இவ்வளவு செலவு. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, படுக்கப் போனேன். கீதை புத்தகம் புரட்டிக் கொண்டே தூங்கப் போனால் தூக்கம் வராமல் எழுந்து தியானம். அதன் பிறகு தூக்கம். நாள் முழுவதும் மின்வெட்டு ஏற்படவே இல்லை.

தூக்கத்திலும் நிறைய கனவுகள். தாலிக்குப் பொன் உருக்க 12,000 ரூபாய் என் பங்காக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். ஏடிஎம்மில் எடுத்து தருகிறேன் என்று போனால் அது ஏடிஎம் இல்லை, தொலைபேசி இணைப்பகம். 12,000 ரூபாய் என் பேர் சொல்லிக் கொடுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பாக இருக்கும், யாருக்கு?  இறங்கி வந்தது விமானத்தில் அல்லது பேருந்திலிருந்து. குடையை மறந்து விட்டு வந்திருக்கிறேன். இப்படி குழப்படியான கனவு.

மாலையில் வேறு எதுவும் செய்வதற்கு நேரம் இருக்கப்போவதில்லைதான். நாளைக்குக் காலையில்  தொலைபேசி தகவல் சொல்லி விட்டுப் பொருட்களை பொதிந்து வெளியில் வைத்து விட்டு போய் சாவியைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். திரும்பி வந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பாட்டி வீட்டில் வைத்து வீட்டைப் பூட்டி வேலூருக்குப் புறப்பட வேண்டியதுதான்.

0 கருத்துரைகள்: